Monday, August 31, 2015

Varalakshmi Vratham Aug 28, 2015

இன்று ஆவணி மாதம் 12 ம் நாள் வெள்ளி கிழமை, வரலட்சுமி விரதம் அனைத்து சுமங்கலி பெண்களாலும் மேற்கொள்ளப்படுகிறது.
       பொதுவாக இந்த விரதமானது ஷ்ரவண சுக்ல சுகர வாரம் அதாவது பௌர்ணமிக்கு அடுத்து வரும் வெள்ளி கிழமைகளில் சுமங்கலி பெண்களால் தங்கள் கணவர்மார் உடல் நலத்துடனும், மனநலத்துடனும், நீண்ட ஆயுளோடும் , செல்வ செழிப்போடும், தம் பரம்பரை செழித்து விளங்கவும் மேற்கொள்ளப்படுகிறது.
        இந்த விரதத்தை பற்றி சிவபெருமானே கந்த புராணத்தில் எடுத்துரைத்துள்ளார்.

விரத வழி முறைகள்:
        முதல் நாளே வீட்டை சுத்தப்படுத்தி பூஜைக்கு தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.
        மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு அல்லது பிரம்ம முஹூர்த்தம் எனப்படும் அதி காலை 4:30 மணிக்கு கலசத்தை வைக்க வேண்டும் அல்லது நல்ல நேரம் பார்த்தும் கலசத்தை ஸ்தாபனம் செய்யலாம்.

கலசத்தை அலங்கரிக்கும் முறைகள்:

        செப்பு, வெள்ளி அல்லது பித்தளை செம்பு = அதற்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வெள்ளை திரி நூலால் பின்னி அலங்கரித்து கொள்ள வேண்டும். பின் அதனுள் அரிசி பருப்பு அல்லது நீரை நிரப்பி ,         9 மஞ்சள் கிழங்கு, 9 கொட்டை பாக்கு, 9 வெற்றிலை, 9 நாணயங்கள், தங்கம் வெள்ளி காசுகள் அல்லது நகைகள், மஞ்சள் கயிறு, குங்குமம் கண்ணாடி வளையல்கள், சீப்பு , சிறு கண்ணாடி இட்டு அதன் மீது மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரித்த கலச தேங்காயை வைத்து கலசத்தின் வாய் பகுதியை மூட வேண்டும்.  தேங்காயை சுற்றிலும் மாவிலைகளை செருகி வைக்கலாம்.
            கலசத்தை வைப்பதற்கு முன் வீடு வாசலில் கோலமிட்டு அலங்கரித்து மாவிலை தோரணம் கட்டி சாம்பிராணி தூபம் போட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
பின் பூஜை அறையில் மாகோலமிட்டு , அதன் மீது மனை பலகை வைத்து, அதில் ஒரு தாம்பூல தட்டில் அரிசியை பரப்பி அதன் மீது கலசத்தை வைக்க வேண்டும். அம்மன் முகம் வைத்தும் அலங்கரிக்கலாம் அல்லது கும்பத்தை புடவை அல்லது ரவிக்கை துணி சுற்றியும் அவரவர் வசதிக்கு ஏற்ப அலங்கரிக்கலாம். கலசத்தின் கழுத்து பகுதியில் ஆபரணங்களை அணிவிக்கலாம், முக்கியமாக அம்மனுக்கு மஞ்சள் தாலியை அணிவிக்க வேண்டும்.
           பின் ஒரு சிறு வாழை இலையில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து குங்குமம் இட்டு  ஊதுபத்தி கற்பூர தீபமேற்றி , முழு முதற் கடவுளான, விநாயகர் வழிபாடல் செய்து, பூஜை தடையின்றி நடக்க வேண்டிக்கொள்ள வேண்டும் .
        பின் பூஜைக்கான அனைத்து வேலைகளையும் ஆரம்பிக்கலாம். நைவேத்தியத்திற்கான பக்ஷணங்களை செய்ய ஆரம்பிக்கலாம். மாலையில் குத்து விளக்கேற்றி மலர்களால் அலங்கரித்து, குல தெய்வ வழிபாட்டுடன், லக்ஷ்மி பாடல்கள் பாடியும் ஸ்லோகங்கள் சொல்லியும் , வழிபாடு செய்யலாம்,  பக்ஷணங்களுடன் 9 பழங்களையும் நிவேதனம் செய்து அருகில் உள்ள சுமங்கலி பெண்களை அழைத்து வெற்றிலை பாக்குடன் மஞ்சள் குங்குமம், மாங்கல்ய கயிறு, கண்ணாடி வளையல்கள் முடிந்தால் ரவிக்கை துணி கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளலாம். வீட்டிற்கு வந்த சுமங்கலிகள் உண்ட பின்பே நாமும் உண்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.
      இந்த பூஜையும் புனஸ்காரமும் தத்தம் தகுதிக்கேற்ப இருக்க வேண்டுமே ஒழிய ஊர் மெச்ச ஆடம்பரமாக செய்ய அகலக்கால் வைக்க கூடாது. "மலையளவு கொடுக்குற சாமிக்கு கடுகளவு கற்பூரம் காட்டினாலும் போதும் ."
      மேலும் வழிபாடு முறைகள் அனைத்தும் மற்றவரும் மேற்கொள்ளும் ஆசையை தூண்ட வேண்டுமே ஒழிய பார்த்து பயந்து ஒதுங்கும் அளவிற்கு இருக்க கூடாது. ஆயிரம் பெண்களின் ஆசிர்வாதத்தை விட கட்டிய கணவனின் ஆசிர்வாதமே பெரிது. சிவனின் இடப்பாகத்தில் சக்தியாக இருக்கும் பெண்கள் நாம் இதை என்றும் மறவாது இருக்க வேண்டும்.











No comments:

Post a Comment